வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாற்றாதே

தர்ணாப் போராட்டம்

நமது செய்தியாளர்

 தமிழ்நாடு கிராம வங்கி வணிக தொடர்பாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாற்ற சொல்லும் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, சேலத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி வணிக தொடர்பாளர்களின் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

 ”தமிழ்நாடு கிராம வங்கியின் கீழ் பணியாற்றும் வணிக தொடர்பாளர்களை தொடர்ந்து  தமிழ்நாடு கிராம வங்கியிலேயே பணியாற்ற அனுமதிக்க  வேண்டும்; தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வணிக தொடர்பாளர்களாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; நபார்டு வங்கி அறிவித்த குறைந்தபட்ச மாதாந்திர தொகுப்பூதியம் ஐந்தாயிரம் ரூபாய் தொகையை வணிகத் தொடர்பாளர்களுக்கு வழங்க வேண்டும்; வணிகத் தொடர்பாளர்களிடம் வரம்பு மீறி  நடந்து கொள்ளும் வங்கி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வணிகத் தொடர்பாளர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு கிராம வங்கி சேர்மன் பேச்சுவார்த்தை நடத்தி சரி செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த தர்ணாப் போராட்டத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளன  மாநில செயலாளர் எஸ். ஏ. ராஜேந்திரன், வணிக தொடர்பாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ், மாநில பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் ராமலட்சுமி, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் எஸ். தீனதயாளன், சி ஐ டி யு சேலம் மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் பிரமிளா மாவட்ட செயலாளர் ஞானசௌந்தரி மாவட்ட தலைவர் பரமேஸ்வரி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.120 பெண்கள் உள்ளிட்டு 200க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்ட முடிவில் தமிழ்நாடு கிராம வங்கி பொது மேலாளரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு சமர்ப்பிக்கப்பட்டது. கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Comment here...