உலகிற்கே வழிகாட்டிய விவசாயப் போராளிகள்

கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன்

ஒரு புறம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக்
கொண்டிருக்கும் வேளையில் ஒன்றிய பாஜக அரசு மூன்று வேளாண்
சட்டங்களை இயற்றி அவர்களின் அடிப்படை வாழ்வையே
கேள்விக்குறியாக்கியது.

2020 நவம்பர் 26 ஆம் நாள் அன்று தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்கிறது. அமைதியான வழியில் அறப்போரில் ஈடுபட்ட விவசாயிகளை ஆளும் பாஜகவினரும், அவர்களின் கூட்டாளிகளும் கொச்சைப் படுத்தினர். ”போராடுபவர்கள் உண்மையான விவசாயிகள் இல்லை. அவர்கள் இடைத்தரகர்கள்” காலிஸ்தானிகள், நக்ஸலைட்டுகள், என்றெல்லாம் வசை பாடினார்கள்.

போராடுவதற்கென்றே நிர்ணயிக்கப்பட்ட இடங்களான ஜந்தர் மந்தரையோ அல்லது ராம்லீலா மைதானத்தையோ தரமாட்டோம் என்று ஆட்சியாளர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டனர். போராடுபவர்களுக்கு எதுவுமே பொருட்டல்ல என்ற வகையில் டெல்லி நகரின் மூன்று எல்லைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை துவக்கினர்.

அவர்களே கொட்டகை போட்டுக் கொண்டு, அவர்களே சமைத்துக் கொண்டு, சாலையோரத்திலே உண்டு, உறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை தடி கொண்டு அடக்க வந்த காவலர்களுக்கும் சோறிட்டனர் ஆண் விவசாயிகள் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான பெண் விவசாயிகளும் கூட போராட்டத்தில் பங்கேற்றனர். வெயில், மழை, வெள்ளம், கொரானா எதுவும் அவர்கள் போராட்டத்திற்கு தடையாக இல்லை. எல்லாவற்றையும் கடந்து போராட்டம் தொய்வில்லாமல் தொடர்ந்தது.

தோல்வியுற்ற பேச்சு வார்த்தை

போராட்டம் வீறு கொண்டு எழுந்ததை அடுத்து, அமைச்சர் அளவிலான பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். 500 விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் “சம்யுக்தா கிசான் மோர்சா” என்ற குடையின் கீழ் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். ”இருக்கும் சட்டங்களில் சிலவற்றை ஆங்காங்கே மாற்றலாம்” என்பதே ஒன்றிய அரசின் நிலைபாடாக இருந்தது. ”அடிப்படையே கோளாராக உள்ளபோது என்ன மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதனால் பயனில்லை” என்பது போராடும் விவசாயிகளின் நிலைபாடாக இருந்தது. பேச்சு வார்த்தை தோல்வியுற்றது.

அடக்குமுறை

தடியடி நடத்தினர். கண்ணீர் புகை வீசினர். தண்ணீர் பாய்ச்சினர். சாலையில் குழி வெட்டினார்கள். ஆணியை நட்டார்கள். குடி தண்ணீரை தடை செய்தனர். போக்குவரத்துக்கு இடைஞ்சல் என்று அருகாமையில் குடியிருப்போர் என்ற பெயரில் குண்டர்களை ஏவி விட்டு தாக்குதல் தொடுத்தார்கள். அக்டோபர் 3 ஆம் நாள் லக்கிம்பூரில் போராட்டத்தில் பங்கேற்று அமைதியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர். எதற்கும் அஞ்சவில்லை விவசாயிகள். இதெல்லாம் அவர்களின் மன உறுதியை சற்றும் குலைக்கவில்லை.

தொழிற்சங்க ஆதரவு

இடதுசாரிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர் ஆதரவு நல்கினர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பத்து மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

மகத்தான நாள்

நவம்பர் 19 ஒரு மகத்தான நாள். ஆணவத்துடன் பல சூழ்ச்சிகள் செய்து போராட்டத்தை நசுக்கப் பார்த்த ஒன்றிய பாஜக அரசை அடிபணிய வைத்த நாள். ”மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும்” என்று பாரதப் பிரதமர் மோடி அவர்களே அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைமையில் லட்சக்கணக்கான விவசாயிகளின் தொய்வில்லா தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இது உழைக்கும் வர்க்கத்திற்கு கிடைத்த பெரு வெற்றி.

“பிரதமரின் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். சட்டபூர்வமாக மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும். மேலும் மின்சார மசோதாவும் ரத்து செய்யப்பட வேண்டும்.”. அதுவரை போராட்டம் ஓயாது என்று போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். உலகிற்கே வழி காட்டியுள்ள விவசாயப் போராளிகளுக்கு செவ்வணக்கம். இந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.

நவம்பர் 29 அன்று நாடாளுமன்றக் கூட்டத்தின் தொடக்க நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன. மக்கள் சக்திக்கு முன்னால் எத்தனை பெரும்பான்மையுள்ள அரசானாலும் அடிபணிந்தே ஆக வேண்டும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது விவசாயப் போராட்டம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது விவசாயப் போராட்டம்.

Comment here...